அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா.. ஓபிஎஸ்ஸுக்கு ஹைகோர்ட் கேள்வி
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா? இல்லையா? என்பது குறித்து பதிலளிக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு, நிலுவையில் இருந்தது. அதன் பிறகு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பொதுக் குழு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு சண்முகம் தொடர்ந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இடைக்கால பொதுச் செயலாளர்
அப்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பன்னீர் செல்வம் தரப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்பது குறித்து, உரிமையியல் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாக கூறினார். மேலும் அது தொடர்பான தீர்ப்பு நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பதில் மனு தாக்கல்
மேலும், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கின்றனவா என பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து, விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

எடப்பாடி வாதம்
வரும் 27 ஆம் தேதி ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்யும்போது இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பும் சண்முகம் தரப்பும் வாதங்களை முன் வைத்து வழக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்படக் கூடாது, ஒற்றை தலைமை பதவியை மீண்டும் கொண்டு வரக் கூடாது என ஓபிஎஸ்ஸின் பதில் மனுவும் சண்முகத்தின் கோரிக்கையும் ஒன்று சேர்ந்தாற் போல் இருக்க வாய்ப்புள்ளது.

பொதுக் குழு செல்லும்
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11 இல் டந்த பொதுக் குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு முன் வைக்க வாய்ப்பிருக்கிறது. பின்னர் இந்த வழக்கில் கால அவகாசம் கேட்கப்படும். இதையடுத்து இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தவுடன் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா, இரட்டை பதவிகள் ரத்து செய்யப்பட்டது செல்லுமா செல்லாதா என தனி நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதை எதிர்த்து எந்த தரப்பினராவது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அங்கு சொல்லப்படும் தீர்ப்பை வைத்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இதிலும் மேல்முறையீடு செய்து அப்போது ஒரு தீர்ப்பு கிடைக்கும். இத்தனை கட்டங்களை இந்த வழக்கு கடந்த பிறகுதான் இரட்டை பதவிகள் செல்லுமா செல்லாதா என்பதில் ஒரு முடிவு பிறக்கும். இந்த வழக்கில் எப்படியாக வெல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் தனது நிர்வாகிகளுடனும் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஓபிஎஸ் தென் தமிழகத்தில் செல்வாக்கு கொண்டுள்ள நிலையில் அதை உடைக்க நேற்றைய தினம் தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications