ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் முறையீடு
Recommended Video

சென்னை: ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர் கோகுல் முறையீடு செய்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் பொதுத் தேர்வுகளும் நெருங்குவதால் ஆசிரியர்களின் ஸ்டிரைக்கால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல் என்ற மாணவர் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு எதிரான மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. எனவே நீங்கள் இங்கு மனுவை வாபஸ் பெற்று விட்டு அங்கு சென்று புதிதாக தாக்கல் செய்யுங்கள்.
அந்த நீதிமன்றத்தில் மனு நிலுவையில் இருக்கும் போது எங்களால் எதுவும் செய்ய முடியாது என கூறி கோகுலின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில் மாணவர் கோகுல் ஹைகோர்ட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு எதிராக முறையீடு செய்துள்ளார். அந்த மனுவை ஹைகோர்ட் நீதிபதிகள் 2 பேர் கொண்ட அமர்வு நாளை விசாரிக்கிறது.












Click it and Unblock the Notifications