உறவில் இருந்துட்டு பாலியல் புகார் கொடுத்தா அப்பாவி பெண்ணுனு இல்லை.. போக்சோ வழக்கில் நீதிபதி அதிரடி
சென்னை: பணம் பறிக்கும் நோக்கில் போக்சோ சட்டத்தை பயன்படுத்தி புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து வாழும் நிலையில், ஏசி சர்வீஸ் சென்டர் உரிமையாளரான தனது உறவுக்காரருடன் நெருங்கி பழகினார். இதனால் அவரிடம் பல்வேறு சூழ்நிலைகளில் கைமாற்றாக 5 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார். அந்த தொகையை திருப்பி கேட்டபோது, பணத்தை தர மறுத்ததுடன், தன்னை மிரட்டுவதாக காவல் நிலையத்திலும், 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குழந்தைகள் நலக் குழுவிலும் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி ஏசி சர்வீஸ் சென்டர் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மனுதாரருக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதற்காக காவல் துறை மற்றும் உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் மூலம் 10 லட்ச ரூபாய் பெற்றுள்ள நிலையில், மேலும் பணம் பெற முடியாது என்பதால், தனக்கு எதிரான பொய் புகாரில் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
புகார் அளித்த பெண் தரப்பிலும் பத்து லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மைதான் என தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரருடன் உறவில் இருந்துள்ள பெண் பல முறை அவரை மிரட்டி பணம் பறித்துள்ளதால் அவரை அப்பாவி என கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதேசமயம், பாலியல் தொல்லை புகாரில் உள்ள உண்மைத்தன்மை குறித்து கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் எனவும், சமரசம் ஏற்பட்டது என்பது வழக்கை ரத்து செய்வதற்கான போதிய காரணம் இல்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
மேலும் மனுதாரருடன் ஏற்பட்ட பிரச்சினையில் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தை பயன்படுத்திய பெண்ணுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications