சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த பா.ஜ.க கல்யாணராமனின் மனைவி.. நிராகரித்த நீதிபதிகள்!
சென்னை: பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமனை கடலூர் சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி அவரது மனைவி தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமன் டுவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

கைது செய்தனர்
இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 16-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் அடைத்து அக்டோபர் 23-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

மனைவி மனு தாக்கல்
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கல்யாணராமனின் மனைவி சாந்தி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 'கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனது கணவரை காரணமில்லாமல் கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

உரிய சிகிச்சை அளிக்கவில்லை.
கண்ணுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை. எனவே தனது கணவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றவும், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மனு தள்ளுபடி
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, கல்யாணராமனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறை மாற்றத்திற்கான அவசியம் ஏற்படவில்லை என தெரிவித்தார். இதையடுத்து கல்யாணராமனின் மனைவி தாக்கல் செய்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications