நடிகர் விஜய் ரூ 1 லட்சம் அபராதம் செலுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை நீக்கக் கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ 1 லட்சம் அபராதம் செலுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரியை நீக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் விஜய்யை கடுமையாக விமர்சித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் ,வழக்கை தள்ளுபடி செய்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை விஜய் தரப்பு மேல் முறையீடு செய்தது. இது வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

விமர்சனம்
இதையடுத்து இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹேமலதா- துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகினார். அவர் நடிகர் விஜய்யை ஏதோ தேச விரோதி போல் சித்தரித்து நீதிபதி விமர்சித்திருந்தது நியாயமற்றது.

விஜய் தரப்பு
தேவையில்லாத கருத்துகளை நீக்க வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி கட்ட தயாராக இருக்கிறார். வணிக வரித் துறையினர் சொல்லும் வரியை 7 அல்லது 10 நாட்களுக்குள் செலுத்துவார். மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ 1 லட்சம் அபராதத்தை நீக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை விடுத்தது.

மேல்முறையீட்டு மனு
இதுகுறித்து நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் தனி நீதிபதி தெரிவித்த விமர்சனம் மற்றும் அபராதம் குறித்து நாங்கள் தெரிவிக்க ஏதும் இல்லை.

20 சதவீதம்
நுழைவு வரியை கணக்கிட்டு கூறுகிறோம். 2012 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 20 சதவீத வரியை ஏற்கெனவே விஜய் செலுத்தியுள்ளார். அது போக மீதமுள்ள 80 சதவீத வரியை அவர் செலுத்தினால் போதும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அடுத்த கட்ட விசாரணை
மேலும் நுழைவு வரி பாக்கி 80 சதவீதத்தை 1 வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும். தனி நீதிபதி கூறிய விமர்சனங்களை நீக்க கோருவது குறித்து அடுத்தகட்ட விசாரணையில் முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications