ADGP கைது! “சட்டத்தை விட மேலானவர்கள் என்று இங்கு யாரும் இல்லை..” - நீதிமன்றம்
சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தமிழகத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த உத்தரவில், நீதிபதி, "சட்டத்தை விட மேலானவர்கள் என்று இங்கு யாரும் இல்லை" என்று கூறியுள்ளார். நீதிபதியின் உத்தரவையடுத்து ஜெயராமன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வழக்கு விசாரணையில் உத்தரவிட்ட நீதிபதி, "நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் பற்றி கவலைப்படவில்லை. இந்தியாவில் நடக்கும் அரசியல் பற்றி உலகிற்கு தெரியும். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற செய்தி மக்களுக்கு செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.

திருவள்ளூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று பதிவாகியிருந்தது. லட்சுமி எனும் பெண்தான் இந்த புகாரை கொடுத்திருந்தார். புகாரில், தனது மூத்த மகன் ஒரு பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தினர் சிலருடன் வந்து தனது மூத்த மகனை வீடு புகுந்து தேடியதாகவும் கூறியிருந்தார்.
மூத்த மகனும், அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டதால், அந்த கும்பல் தனது இளைய மகனான 18 வயது சிறுவனை கடத்திச் சென்றதாகவும் லட்சுமி குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், இளைய மகன் காயங்களுடன் ஒரு ஓட்டல் அருகே இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். இளைய மகன் ஏ.டி.ஜி.பி-யின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் இறக்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ-வுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பவர்கள், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ "பூவை" ஜெகன் மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமனும்தான். இதனையடுத்து முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ நீதிமன்றத்தை அணுகியிருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏன் ஏடிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, "முதலில் எம்எல்ஏ மீதான புகாரை விசாரிக்க இருந்ததால், ஏடிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை" என்று கூறியது.
இன்று காலை இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏடிஜிபி மற்றும் எம்எல்ஏ இருவரும் மதியம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மதிய உணவுக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியபோது, எம்எல்ஏவுக்கு எதிராக நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை அடுக்கியது.
அதாவது, "தனது தொகுதியில் மக்களுக்கு வேலை செய்யாமல் கட்டப்பஞ்சயாத்து செய்து வருகிறீர்களா? எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு "மூன்றாம் தர" குடிமகனாக நடந்துகொண்டு விசாரணையை தடுக்கிறார். நீங்கள் சாதாரண நபர் அல்ல. உங்களுக்கு எதிரான விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள். ஏற்கனவே, காவல்துறையும், அமைச்சர்களும் கூட்டணியாக இருக்கிறார்கள். எப்போது நீங்கள் மக்களுக்காக வேலை செய்வீர்கள்?
உங்கள் அதிகாரத்தையும் ஆதரவையும் தவறாக பயன்படுத்தும்போது நீதிமன்றம் அதை வேடிக்கை பார்க்காது. தங்களுக்கு இருக்கும் குறைகளைத் தீர்க்க உதவுவீர்கள் என்று நம்பி மக்கள் உங்களை நாடி வருகிறார்கள். ஆனால் நீங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இரண்டு பேர் திருமணம் செய்துக்கொள்கிறாரகள் எனில், அதை அனுமதியுங்கள். அதில் சட்ட சிக்கல் இருந்தால் காவல்துறையும் நீதிமன்றமும் அதை கவனித்துக்கொள்ளும். ஆனால் நீங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறது.
அதேபோல ஏடிஜிபிஐயை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து சீருடையில் இருந்த ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதன் மீது விசாரணை நடத்தி நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்பத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications