அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளார்.. ஜாமீன் மறுப்புக்கு காரணம் சொன்ன நீதிபதி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார்.

அவரது நீதிமன்றக் காவல் 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜூன் 16ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20ம் தேதிகளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் அக்டோபர் 10-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் நேற்றும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அக்டோபர் 10ஆம் தேதி சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில் சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அக்டோபர் 11 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு 11 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு "இதய அறுவை சிகிச்சை செய்ததிலிருந்தே உடல்நிலை முழுவதுமாக குணமடையவில்லை. அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் " என வாதம் செய்தனர்.
இதை கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணை மீண்டும் 16ஆம் தேதி வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக ஜெயச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் நீதிபதி கூறுகையில் மருத்துவ காரணங்களை காட்டி ஜாமீன் கொடுக்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார்.
அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளதால் சாட்சியை கலைக்க வாய்ப்பு உள்ளது. கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய புகாரும் செந்தில் பாலாஜி மீது உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் (அக்டோபர் 20) முடிவடைவதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்படுவார்.












Click it and Unblock the Notifications