ப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்த கோரிய வழக்கு! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: ப்ளூ கிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ப்ளூ கிராஸ் அமைப்பை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ப்ளூ கிராஸ் அமைப்புக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கடந்த பிப்ரவரி மாதம் திடீர் ஆய்வு நடத்தியது. ப்ளூ கிராசில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு முறையாக உணவளிக்கப்படுவதில்லை எனவும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் அறிக்கை அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தமிழக அரசு நிலம் வழங்கியுள்ளதால், அதனை ஏற்று நடத்த வேண்டும் எனவும், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பெருமளவில் நிதி பெறும் ப்ளூ கிராஸ், நிதி விவரங்களை வருமான வரித் துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித் துறை, ப்ளூ கிராஸ் அமைப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.












Click it and Unblock the Notifications