தீபாவளி 2024: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள்! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு
சென்னை: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்றும் டெண்டர் நியாயமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பாணை கடந்த 13 ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் நிர்வாக இயக்குனரே டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் டெண்டரை மாற்றியமைக்கவும், டெண்டர் விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கு அதிகாரம் உள்ளதாக டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போன்ற சில நிபந்தனைகளை நீக்கி வரும் அக்டோபர் 18 ம் தேதி முதல் நவம்பர் 1 ம் தேதி வரை தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் டெண்டர் நிபந்தனைகள் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படை தன்மை விதிகளுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார்.
அதன் பின்னர் அந்த நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications