தனியார் மருத்துவமனையில் சர்ஜரியில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன்? கோர்ட் கேள்வி
சென்னை: தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், வயிற்று வலியால் அவதிப்பட்ட தனது 12 வயது மகன் கிஷோரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், குடல் வால் அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக பணத்தை செலுத்திய பின், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபினவ் என்பவர் அறுவை சிகிச்சை முன் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் தன் மகன் கிஷோரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கிஷோர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனை மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியரின் பொது மக்கள் குறைத் தீர்வு முகாமில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தன்னுடைய மகன் உயிரிழப்புக்கு காரணமாக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி, அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, அரசியல் செல்வாக்கு இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால் மருத்துவ நிர்வாகத்தினர் மீது இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து அதிகமானதன் காரணமாகவே கிஷோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவர் அபினவ் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்றார். அவர் மீது பணி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மருத்துவ கல்வி இயக்க இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications