சங்கராபுரம் வெடிவிபத்து: வெடிபொருட்களை முறையாக பாதுகாக்காததே காரணம்.. ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: பட்டாசு கடைகளில் வெடி பொருட்களை முறையாக பாதுகாக்காததே சங்கராபுரம் போன்ற வெடிவிபத்து சம்பவங்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலை அகரம் என்ற ஊரில் நித்யா என்பவர் உரிமம் பெற்று அமைத்துள்ள பட்டாசு கடையில், வெடிபொருள் துணை கட்டுப்பாட்டாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, விதிமீறல் கட்டிடத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாக கூறி, பட்டாசு கடைக்கு அக்டோபர் 28 ல் சீல் வைக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றி கடையை நடத்த அனுமதிக்கக் கோரி பட்டாசுக் கடை உரிமையாளர் நிதயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, உரிமம் பெற்று அனைத்தும் இயல்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் விதிமீறல் இருப்பதாக கூறி, கடைக்கு சீல் வைத்திருப்பதாகவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில நாட்கள் மட்டுமே நடத்தக்கூடிய வியாபாரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரு தளங்களில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டதாலும் சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பட்டாசு கடைகளில் வெடி பொருட்களை முறையாக கையாளாமல் அலட்சியமாக இருப்பதே, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வெடிவிபத்து போன்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.
இவற்றை பதிவு செய்த நீதிபதி மகாதேவன், இன்று மதியத்திற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டாசு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளிக்கு மூன்று நாட்களே உள்ளதை கருத்தில் கொண்டு வட்டாட்சியர் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டு பட்டாசு கடையை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Recommended Video
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுதான் மக்களின் நினைவுக்கு வரும் அத்தகைய பட்டாசுகளை எத்தனை ஆபத்துடன் தயார் செய்கிறார்கள் என்பது நொடி பொழுதில் நடைபெறும் விபத்துகள் உணர்த்துகின்றன.












Click it and Unblock the Notifications