குண்டர் சட்டத்தில் திருத்தணிகாசலம்.. சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தாக்கல் செய்த வழக்கு குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக, தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் தந்தை கலியபெருமாள் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தான் ஒரு பாரம்பரிய மருத்துவம் என்றும் கடலூர் வருவாய்த்துறை தனக்கு முறையான சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே தான் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய சிகிச்சையால் யாரும் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், தான் கூறிய கருத்துக்களை காவல்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. எனவே குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தன்னை குண்டர் சட்டத்தில் அடைக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகளை விதிமீறல்கள் உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருத்தணிகாசலம் ஒரு சித்த மருத்துவர் என்றும் கடலூர் மாவட்ட தாசில்தாரிடம் உரிய சான்றிதழ் பெற்றுள்ளார் தெரிவித்தார். கபசுர குடிநீர் பற்றிதான் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார் எந்த ஒரு நோட்டீசும் வழங்காமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையர்,மற்றும் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications