நீலகிரியில் பட்டியலினத்தவரின் நிலத்தை வாங்கிய நடிகை பூஜா பட்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நடிகை பூஜா பட் வாங்கிய 26.12 சென்ட் நிலத்தை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார், பூஜா பட்டின் வழக்கறிஞர் கார்த்திக் சேஷாத்ரி ஆகியோரின் மறுபரிசீலனை தொடர்பாக முரண்பட்ட கூற்றுக்கள் காரணமாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
பூஜா பட் வாங்கிய நிலம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியலினத்தவரான எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை 10 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். 10 ஆண்டுகள் கடந்த பிறகு குப்பன், அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். தொடர்ந்து, பலரிடம் கைமாறிய அந்த நிலைத்தை, பாலிவுட் நடிகை பூஜா பட் கடந்த 1999ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பூஜா பட் தமிழில் 'கல்லூரி வாசல்' திரைப்படத்தில் நடித்தவர்.
இந்நிலையில், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு: அந்தப் பகுதியில் இதேபோன்று நிலம் வாங்கிய பூஜா பட் உள்ளிட்ட பலர் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவை எதிர்த்து 2017ஆம் ஆண்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இதேபோன்று அரசுக்கு சொந்தமான சொத்துகளை மீண்டும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாலிவுட் நடிகை பூஜா பட்டிடம் இருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் கோத்தகிரி தாலுகா தாசில்தாரால் தொடங்கப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதனை மறுத்த பூஜா பட்டின் வழக்கறிஞர் சொத்தை அவர் தொடர்ந்து அனுபவித்து வருவதாக வாதிட்டார்.
ஆலியா பட்டின் அக்கா: இந்த முரண்பட்ட வாதங்கள் காரணமாக, நிலத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

கோத்தகிரியில் நிலம் வாங்கிய நடிகை பூஜா பட், தமிழில் 'கல்லூரி வாசல்' திரைப்படத்தில் நடித்தவர். இவர் பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட்டுக்கு அக்கா முறை கொண்டவர் ஆவார். அதாவது, பூஜா பட், மகேஷ் பட் - கிரண் பட் தம்பதியருக்கு பிறந்தவர். மகேஷ் பட் பின்னாளில் திருமணம் செய்து கொண்ட சோனி ரஸ்தானின் மகள் ஆலியா பட் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications