ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்.. அவசர அவசரமாக போன உள்துறை செயலாளருக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மதியம் 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கெதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து மாலையில் அவர் ஆஜரான நிலையில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் உள்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்குகளில், காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், நேரில் ஆஜராகும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015 ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் புலன் விசாரணை முடிந்த பின், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல எனவும், தமிழகம் முழுவதும் பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுவதாகவும், நீதிமன்றத்தை நாட இயலாத ஏழை மக்கள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதி, நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
வழக்குப்பதிவு செய்யக் கோரியும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது, காவல் துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே காட்டுகிறது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, உள்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் அந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் உள்துறை செயாலளர் நேரில் ஆஜராக தடை விதிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது
அப்போது நீதிபதி இன்று மாலை 4.30 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தார்.
இந்நிலையில் வழக்கு மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, அனைத்து மக்களாலும் நீதிமன்றத்திற்கு வரமுடியாது என்பதால், பொதுமக்களும் உதவும் வகையில் விரைந்து தீர்வு காண்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
உங்களை வரவழைப்பது நீதிமன்றத்தின் நோக்கமல்ல என தெரிவித்த நீதிபதி, காவல்துறையில் நடப்பதை தெரியப்படுத்துவதற்காகவே ஆஜராக உத்தரவிட்டதாகவும், இது போன்ற சிக்கல்கள் காவல்துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications