சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வேகமாக தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு ரூபாய் 1000 பணமும் அதனுடன் பரிசு பொருட்களும் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து இருந்தது.

இந்த பரிசு பொருளில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவை இருக்கும். பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால் கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் அனைத்து கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட், அனைத்து கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க கூடாது, முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கலாம் என்று கூறியது.
இதனால் 1.30 கோடி முன்னுரிமை அல்லாத அட்டைதாரர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தற்போது தனது உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதில் அரசுக்கு உயர்நீதிமன்றம் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது. அதில், அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் மக்களை வரிசையில் காக்க வைப்பது ஏன்? மக்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தலாமே என்றுள்ளது.
மேலும் , ரூ.1000 அளிக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லும் நிலைக்கு மக்களை கொண்டு சென்றது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை ஹைகோர்ட் அறிவிப்பால் பொங்கலுக்கு மேலும் 10 குடும்பம் அட்டைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications