நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? காவல்துறையை விளாசிய ஹைகோர்ட்!
Recommended Video
சென்னை: இளம்பெண் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் மெத்தனமாக இருந்த காவல்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். இதுதொடர்பாக மகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து தனது மகளை கண்டு பிடித்து தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இன்று விசாரணை
மேலும் தனது மகளை கண்டுபிடித்து தர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மகேஸ்வரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?
அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறையை சரமாரியாக விளாசியது. சாதாரண மக்கள் காணாமல் போனதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நயன்தாரா போன்ற நடிகைகள்
4 மாதத்திற்கு முன்பு அளித்த புகாரில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் நயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களாக என்றும் கேள்வி எழுப்பியது.

நீதிபதிகள் காட்டம்
மாத சம்பளம் வாங்கும் போலீசார் அதற்கு ஏற்ப பணி செய்ய வேண்டும். இல்லையென்றால் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

வருத்தமளிக்கிறது
சாதாரண மக்கள் புகார் அளித்தால் இப்படிதான் காவல்துறையின் நடவடிக்கை இருக்குமா? என்றும் காணாமல் போன இளம்பெண்ணை மீட்க 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வீட்டில் யாராவது காணாமல் போனால்
உங்கள் உறவினர்களோ அல்லது உங்கள் வீட்டில் யாரேனும் காணாமல் போனால் இப்படிதான் இருப்பீர்களா? என்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சாதராண மக்கள் காணமல் போனதாக அளிக்கப்படும் புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

17ஆம் தேதி அறிக்கை தாக்கல்
இளம் பெண் மாயமான வழக்கில் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை ஹைகோர்ட் வரும் 17 ஆம் தேதி இளம்பெண் மாயமான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications