நானே பணத்தை இழந்துட்டேன்.. ஜாமீன் கேட்டு கெஞ்சிய ஆருத்ரா கிளை இயக்குநர்.. தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிறுவனத்தின் திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சூசைராஜின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ 2,438 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது.

ஆனால், ஆருத்ரா நிறுவனம் சொன்னது போல் பணத்தை தரவில்லை. முதலீடு செய்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தில் இயக்குநர்கள், கிளை இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த மோசடிக்கும், தனக்கும் எந்தத் தொடர்பு இல்லை எனவும், தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையை ஆரூத்ராவில் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆரூத்ராவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு கடந்த முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு சூசைராஜன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் சூசைராஜின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications