அதிரடி.. டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்.. உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளோடு இணைந்து செயல்பட்டு வரும் பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளில் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை எனவும் கூறியுள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டு தயாரிப்பு மதுபானங்கள் பீர் வகைகள் ஒயின் ஆகியவை விற்பனை செய்வதன் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது.

டாஸ்மாக் நிறுவனம்
சராசரியாக ஒரு நாளைக்கு டாஸ்மாக் கடைகளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது அதே நேரத்தில் புத்தாண்டு பொங்கல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாட்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகளில் குடிகாரர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

மதுபான பார்கள்
150 கோடியில் இருந்து 200 கோடி ரூபாய் வரை பண்டிகை காலங்களில் மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகளோடு பார்களும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற டாஸ்மாக் மதுக்கடை பாரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அத்துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

டெண்டர் முறைகேடு
பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள நிலையில் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளோடு இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புதிய டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் வெளியிட்டது.. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளோடு இணைந்து செயல்பட்டு வரும் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் ,
டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதங்களில் மூட வேண்டும் எனவும், டாஸ்மாக் கடைகளில் பார்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்க அதிகாரம் இல்லை எனவும், கடைகளில் பார்களை இணைந்து நடத்த சட்டத்தில் இடமில்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மதுக்கடைகளில் மதுவகைகளை வாங்குவோர் வீடுகளிலோ அல்லது பொது இடமில்லாத இடங்களிலிலோ மது அருந்திக் கொள்ளலாம் எனவும் அந்த உத்தரவில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications