8 வழிச்சாலை திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த அவசரம் காட்டிய மாநில அரசு.. ஹைகோர்ட் குட்டு!
Recommended Video

சென்னை: 8 வழிச்சாலை திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என மாநில அரசு அவசரம் காட்டியதாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
8 வழிச்சாலை திட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறுகையில் 8 வழிச்சாலை திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திட மாநில அரசு அவசரம் காட்டியுள்ளது. இந்த நில ஆர்ஜித நடவடிக்கை சட்டவிரோதமானது.
இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையால் தவறுகள் இருந்தால் அதை எதிர்த்து வழக்குகள் தொடரலாம். நிலம் கையகப்படுத்திய ஆதாரங்களை பார்க்கும் போது விதிகளின் படி நடைபெறவில்லை என தெரிகிறது.

சாசன விதிகள் மீறுவது
மக்கள் பணம் ரூ 10 ஆயிரம் கோடியில் சாலை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. சுற்றுச்சூழல் ஒப்புதல் இன்றி செயல்படுத்தப்படும் திட்டங்களால் அரசியல் சாசன விதிகள் மீறப்பட்டது போலாகிவிடும்.

மறுகுடியமர்வு
நில உரிமையாளர்களின் மறுவாழ்வு, குடியமர்வு குறித்து மத்திய, மாநில அரசுகள் கூறவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களின் பெயருக்கு 2 வாரங்களில் திருப்பி அளிக்க வேண்டும். திட்டத்துக்கு எதிராக அமைதியாக நடத்தப்பட்ட போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.

பலப்பிரயோகம்
சாலை அமைக்கும் போது சுற்றுச்சூழல் ஆய்வு தேவை என்பது குதிரைக்கு கடிவாளம் போடுவது போன்றதாகும். போராடுவோருக்கு எதிராக எழுதப்படாத தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்தனர்.

நல்ல முறையில்
மக்கள் நல அரசு என்பது கண்களை மூடிக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. மக்கள் நல அரசு என்ற முறையில் விவசாயப் பொதுநலனை காக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் ஒப்புதல் எவ்வளவு அவசியமோ அதுபோல் மக்கள் கருத்தும் அவசியமாகும்.

வேட்டை
8 வழிச்சாலை திட்டத்தை ஆய்வு செய்த தனியார் நிறுவனம் அளித்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. தனியார் நிறுவனம் அளித்த அறிக்கையில் ஏராளமான தவறுகள் உள்ளன. சாலைக்கு அனுமதி அளித்தால் அரிய வகை பறவைகள், விலங்குகள் வேட்டையாடப்படும் அபாயம் ஏற்படும்.

மனிதர்கள் பொறுப்பு
ஏற்கெனவே 2 முக்கிய மலைவாசஸ்தலங்கள் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரியவகை மதிப்புமிக்க மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும். நீர் நிலைகள், விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராயாமல் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. வனப்பகுதி வழியாக சாலை அமைத்தால் விலங்குகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு மனிதர்களே பொறுப்பாவர் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications