தவறான சிகிச்சை.. இஎஸ்ஐ மருத்துவமனையிடம் ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய பெண்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்ததால் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட பெண் வங்கி ஊழியர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் வங்கியின் துணை நிறுவனத்தில் பணியாற்றிய கஸ்தூரி பிரியா என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்து, இயல்பு வாழ்க்கை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், தனக்கு அளித்த சிகிச்சை குறித்து நிபுணர் குழுவை நியமித்து விசாரிக்க கோரியும், தனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் கஸ்தூரி பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தவறான சிகிச்சை வழங்கியதுடன், தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகம் தரவில்லை என்றும், இதன் காரணமாக பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இ.எஸ்.ஐ. கழகம், அசோக் நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆணையம் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications