ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாதா? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் பரபர நோட்டீஸ்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த திருமகன் ஈவேரா மரணமடைந்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின்படி திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரச்சாரம் செய்ததில் பல்வேறு விதிமீறல்கள் நடந்தன என அவர் குற்றம்சாட்டினார்.
ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்தனர். மேலும் தேர்தல் ஆணையம் விதித்துள்ள வரம்பை மீறி அதிக பணத்தை பிரச்சாரத்திற்காக செலவழித்துள்ளனர். எனவே, ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications