செந்தில் பாலாஜியை எப்போது முதல் ED விசாரிக்கலாம்.. சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரணை
சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
இதனையடுத்து கடந்த மாதம் 21-ந் தேதி செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதன்பிறகு ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த 17 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். இதற்கு இடையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் விடுத்த உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியை எப்போதில் இருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து காவலில் எடுக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்ய வாய்ப்பட வாய்ப்புள்ளது.
செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும் என மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் தனது உத்தரவில் கூறியிருந்த நிலையில், நாளை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இது குறித்து விசாரிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications