தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்.. தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
சென்னை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் அரசின் தலைமைச் செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் 'கீழ் மருவத்தூர்' ஏரி இருந்து வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இதேபோல், தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் , தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளதாக பல்வேறு வழங்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய பல்வேறு வழக்குகள், உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி அது அனுமதிக்கப்படாது எனவும் தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏரி, குளங்களில் தனியார் ஆக்கிரமிப்பு மட்டும் இன்றி, அரசு அலுவலகங்கள் கட்டுவதற்காகவும் ஆக்கிரமிப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறும்பட்சத்தில், தலைமை செயலாளரை நேரில் ஆஜராக கூறி, விளக்கம் பெற வேண்டியிருக்கும் என எச்சரித்தனர். மேலும், வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.