சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுமா? நாளை தீர்ப்பளிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இதற்கிடையே இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சவுக்கு சங்கர்: இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், அதனைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி: அப்போது சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது தான் என்று நீதிபதிகள், இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்குத் தண்டனை பெற்றுத்தரலாம் எனவும், ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு எனக் குறிப்பிட்டனர். மேலும், திரைப்படங்களில் போலீசார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது? அப்படியென்றால் அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.
நாளை தீர்ப்பு: இதற்கிடையே வழக்கின் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்தச் சூழலில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, நாளை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பளிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications