வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை.. போக்குவரத்து போலீஸுக்கு போன பார் அசோசியேஷன்
சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை போக்குவரத்து போலீசாரை வலியுறுத்தியுள்ளது.
சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக, வழக்கறிஞர்களுக்காக அவர்களின் பதிவு எண்ணுடன் கூடிய வழக்கறிஞர்களுக்கான ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. நடைபாதைகளில் விற்கப்படும் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வாங்கி சிலர் தவறாக பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு, குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தமானது எனவும், அது ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதனால், சரியான சட்டப் பிரிவை குறிப்பிடும்படியும், வழக்கறிஞர்கள் பற்றி, அறிவிப்பில் சுட்டிக் காட்டியுள்ள குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications