சில்மிஷத்தால் சிக்கிய சிவசங்கர் பாபா.. கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்! மாணவியை ஆஜர்படுத்த ஆர்டர்
சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது மின்னஞ்சலில் புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இயங்கி வருகிறது சுஷில்ஹரி சர்வதேச பள்ளி. இதன் நிறுவனராக இருப்பவர் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான தகவல் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சாமியார் சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். நீதிபதி வி.சிவஞானம் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2007 ஆம் ஆண்டு சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவி 2021 ஆம் ஆண்டில் சிவசங்கர் பாபா மீது புகாரளித்ததாக காவல்துறை கூறுவதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த மாணவி ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், மின்னஞ்சல் மூலமாக அவர் சிவசங்கர் பாபா மீது புகாரளித்ததாக கூறப்படும் நிலையில் புகாரின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.
இதனை அடுத்து, புகாரளித்த மாணவியை செப்டம்பர் 15 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த ஏற்பாடு செய்யுமாறு சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உத்தரவு பிறப்பித்தார். அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சாமியார் சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications