கோமியம் குடிச்சாரு ஜுரம் போச்சு..சர்ச்சையில் சென்னை ஐஐடி காமகோடி! காம’மோடி’ என கூறிய செல்வ பெருந்தகை
சென்னை: கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியிருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒருவர் ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை. அவரது அறிக்கையில் காமகோடி என்பதற்கு பதிலாக காமமோடி என்று ஒரு இடத்தில் பெயர் மாறியுள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மாம்பலத்தில் உள்ள கோ-சோலையில் கடந்த 15ம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் புகழ்பெற்ற சென்னை ஐஐடியின் இயக்குனரான காமகோடி பங்கேற்றிருந்தார்.

அப்போது பேசிய அவர், "கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இது ஜுரத்தை கூட சரியாக்கும். பாக்டீரியா, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராக செயல்படுவதால் இதற்கு இந்த தனிச்சிறப்பு உண்டு. ஒருமுறை சந்நியாசி ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டது" என்று கூறியிருந்தார்.
கோமியம் குடிக்கக் கூடாது என பல மருத்துவ ஆய்வுகள் கூறியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சென்னை ஐஐடியின் இயக்குனரே இப்படி பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில், பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒருவர் ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்ததில் கோமியம் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளது.
இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளதை காமகோடி போன்றவர்கள் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்பை தருகிறது. வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறுவதை வழிமொழிந்து காமகோடி பேசியிருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவியல்பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்ததில்லை என உறுதியாக நம்பப்படுகிற நிலையில் அதற்கு விரோதமாக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரே பேசியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இத்தகைய பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒருவர் ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர். இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதால் இவரைப் போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கிற மாணவர்களின் எதிர்காலத்திற்கே உகந்ததல்ல. எனவே, இத்தகைய கருத்துகளின் மூலம் கல்வி நிலையங்களை காவி மயமாக்குவதை அனுமதிக்க முடியாது." என கூறியுள்ளார்.
காமமோடியா?: காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் முதல் பத்தியில் 'காம மோடி' எனவும் அடுத்தடுத்த இடங்களில் காமகோடி என்றும் இருக்கிறது. திட்டமிட்டு செல்வ பெருந்தகை அப்படி குறிப்பிட்டாரா? அல்லது எழுத்துப் பிழையா என விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications