முதல்வர் துறையில் ஊழல் செய்யும் தனியார் நிறுவனம்! கூட்டணியிலிருந்து எழும் குரல்! விஜய்க்கு கோரிக்கை!
மதுரை: மதுரையில் தூய்மை பணியை மேற்கொண்டு வரும் அவர்லேண்ட் எனும் தனியார் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், முதலமைச்சர் விஜய்யின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இந்த நிறுவனம் பணியாற்றுவதாகவும், எனவே அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிறுவனம் தூய்மை பணிகளை சரியாக செய்யாமல், தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

தவெக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஒருவர், முதல்வர் துறையில் தனியார் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுப்பியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சு.வெங்கடேசன் எம்பி என்ன பேசினார்?
"மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அவர்லேண்ட் எனும் நிறுவனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தனியார் நிறுவனம், தூய்மை பணிகளை மேற்கொள்வதில் தொடர்ந்து மோசடிகளை செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மதுரை மாநகராட்சி முழுவதும் இருந்து 916 டன் குப்பைகளை சேகரித்து அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக பக்கத்தில் இருக்கும் மண்ணை அள்ளி, குப்பை கிடங்கில் கொட்டி, அதை வைத்து கணக்கு சொல்லி வருகிறது இந்த நிறுவனம்.
இதை மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, சிஐடியு போன்ற தனியார் நிறுவனங்கள் இதனை தொடர்ந்து கண்டித்திருக்கின்றன. இப்படி இருக்கையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 1000 டன் மண்ணை அள்ளி கொட்டி மோசடி செய்ததாக, மாநகராட்சி அதிகாரிகளே இந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை.
இப்படி இருக்கையில், சித்திரை திருவிழாவில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனில், நிறுவனத்தின் மீது போடப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தையே அந்நிறுவனம் பிளாக் மெயில் செய்ததது. ஆனால், மாநகராட்சி தனது நலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து இந்த முறைகேட்டில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனவே முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துறையில் நடைபெறும் ஊழலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications