சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை கூடவா? 90 நிறுவனங்கள் சொத்து வரி பாக்கி.. சென்னை மாநகராட்சி சொல்வதென்ன
சென்னை: சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய் ஆதாரமான சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.. பல கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் லிஸ்ட் வெளியிடப்பட்ட நிலையில், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த அதிரடியை மாநகராட்சி கையிலெடுத்துள்ளது..!!
சொந்த வீடு வைத்திருப்பவர்களிடம், நிலம் வைத்திருப்பவர்களிடம் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுவது வழக்கமாகும். இப்படி வசூலிக்கப்படும் வரிதான், மாநகராட்சிகளுக்கு முக்கிய வருவாய் இனமாக விளங்கி வருகிறது.

இந்த வருவாயை கொண்டுதான், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள், சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
சொத்து வரி சலுகைகள், ஊக்கத்தொகை, சர்ப்ரைஸ் பரிசு
எனவேதான் உரிய காலக்கட்டத்தில் சொத்து வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காகவே, சலுகைகளும் வழங்கப்படுகின்றன.. குறிப்பிட்ட தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதல்முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது..
காலக்கெடு முடிந்தும் வரிகட்டாமல் இருந்தால் மட்டுமே அபராதமும் விதிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் வரியை செலுத்த, அந்தந்த மாநகராட்சிகள், பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளன. சென்னையில் உள்ள சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலமாக மாநகராட்சிக்கு இந்த வருவாய் கிடைத்து வருகிறது.
இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரி
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும், இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியை 2025 அக்டோபர் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஏற்கனவே தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத 90-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் லிஸ்ட்டை சென்னை மாநகராட்சி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக 27.31 கோடி ரூபாய் வரிப் பாக்கி வைத்துள்ளதாக மாநகராட்சி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதில் சிடிஎஸ் ஸ்டாண்டர்ட் டவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2.42 கோடி ரூபாயும், சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை 1.64 கோடி ரூபாயும் சொத்து வரி பாக்கி வைத்துள்ளன.
ஸ்பெஷல் முகாம்கள்
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய வரிப் பாக்கிகளை எளிதாகச் செலுத்துவதற்காக, மண்டல வார்டு அலுவலகங்களில் கடந்த 3ம் தேதி முதல் வரும் 17ம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை பயன்படுத்தி அனைவரும் தங்களது சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.
வரி பாக்கி - புதிய அதிரடி
அதாவது, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வரிப் பாக்கிகளை முழுமையாக வசூலிக்கும் நோக்கில், இந்த கூடுதல் பணியாளர்கள் சென்னை முழுக்க வீடு வீடாகவும், நிறுவனங்கள்தோறும் நேரடியாகவே சென்று வரியை சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட போகிறார்களாம்..
மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தவும், வரி ஏய்ப்புகளை தடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவும் எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி, சென்னைவாசிகளிடையே பெருத்த கவனத்தை பெற்று வருகிறது...!!!













Click it and Unblock the Notifications