எம்எல்ஏக்களை வாங்குவதில் செலுத்தும் கவனத்தில்! கொஞ்சமாவது காவிரி நீரில் காட்டுங்கள்! உதயநிதி தாக்கு
சென்னை: எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தமிழகத்திற்கு காவிரி நீரை முதல்வர் விஜய் பெற்றுத் தருவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது' என்றும், 'நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை' என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே பயிர்க் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர்
ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு உதயநிதி விமர்சித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9 டிஎம்சி நீரையும், ஜூலையில் 32 டிஎம்சி நீரையும் திறந்துவிடுமாறு கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை ஜூன் மாதத்திற்கான நீரை திறக்கவில்லை.
இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் கர்நாடகா, தமிழக விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் என தமிழக அரசு கருத்து சொல்கிறது. ஆனால் கர்நாடகா அரசோ, மேகதாதுவில் அணை கட்டினால் எந்த பாதிப்பும் இல்லை என பொய் சொல்கிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடகா நீர்ப் பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேட்டி அளிக்கையில், கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகள் நிரம்பவில்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என தெரிவித்துள்ளார். இவருக்கு தமிழக அரசியல்வாதிகளும் விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications