அரசு பள்ளிகளில் அவலம்.. 1 மாதம் ஆகியும் கைக்கு வராத புத்தகங்கள்! எதை வைத்துப் படிப்பது! பகீர் புகார்
சென்னை: தமிழகத்தில் 2026 - 2027ஆம் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் உற்சாகமாக வகுப்பாறைகளில் காத்திருந்தாலும் பாடபுத்தகங்கள் இல்லாததால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கல்வி ஆண்டு தொடங்கும். முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பள்ளிகள் திறப்பு நாளன்றே பாட புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பள்ளிகள் திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பல இடங்களில் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்களிடம் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
இது தொடர்பாக பேசி உள்ள கல்வியாளர்கள்," குழந்தைகள் புதிய கல்வியாண்டில் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் தொடங்குகிறார்கள். இது போன்ற நேரங்களில் அவர்களிடம் பாடப் புத்தகங்கள் இல்லை என சொல்வது கற்றலின் ஆர்வத்தை குறைப்பதோடு கல்வியின் மீதான நம்பிக்கையை பாதிக்கும் என்கின்றனர். கல்வி ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்களில் முதல் பருவ இடைத் தேர்வு நடத்தப்படும்.
பாடப்புத்தகங்கள்
ஆனால் ஒரு மாதமாகியும் பாடப் புத்தகங்கள் இல்லை என்றால் ஆசிரியர்கள் எதை வைத்து பாடம் நடத்துவார்கள்? மாணவர்கள் எதை வைத்து படிப்பார்கள் என்பது கூட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே புத்தகங்கள் தான் முக்கிய பாலமாக செயல்படுகின்றன. அந்த அடிப்படையை வசதியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்டு விடும். ஓரிரு நாள் மட்டுமே அதில் வித்தியாசம் இருக்கும்.
பள்ளிக்கல்வித்துறை
அப்படி இருக்கும் சூழலில் ஏற்கனவே பள்ளிகளுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு சென்றடைந்து விட்டதா என்பதை சரி பார்க்க அதிகாரிகள் முன் வராதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஒரு முழுமையான செயல் திட்டத்துடன் செயல்பட்டு பள்ளிகளுக்கு முன்னரே புத்தகங்களை அனுப்பி இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் ஆட்சியும் அமைச்சர்களும் மாறலாம். ஆனால் பள்ளிக்கல்வித்துறை போன்ற முக்கிய நிர்வாக துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் தொடர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க அவர்களிடமே இருக்கிறது.
பொது தேர்வு
பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்பது ஒரு மிகப் பெரிய நிர்வாகக் குறைபாடு என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடக்கப்பள்ளி மட்டுமல்லாது இது போன்ற புத்தகம் தாமதமாக வழங்கப்படுவதால் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு போன்ற பொது தேர்வு எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். கல்வியாண்டின் தொடக்கத்திலேயே கற்பிக்க வேண்டிய பாடங்கள் தாமதமாகும் போது. அவற்றை பின் நாட்களில் வேக வேகமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பும் உள்ளது.
செங்கோட்டையன்
தமிழக வெற்றி கழகத்தில் தற்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். இது போன்ற முக்கிய பிரச்சனைகள் ஏற்படும் போது அவரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக நடக்கவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றன.
கல்வியாளர்கள் கோரிக்கை
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உடனடியாக தலையிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் முழுமையாக சென்றடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மாணவர்களின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.














Click it and Unblock the Notifications