சென்னைக்கு மிக அருகே மாண்டஸ்! சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்க்கும் மழை! அடுத்த 3 மணி நேரம் ஜாக்கிரதை
சென்னை: மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை எந்தவொரு புயலும் தமிழகத்தில் கரையை கடக்காமல் இருந்தது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பருவமழை சற்று குறைவாகவே இருந்துள்ளது.
இந்தச் சூழலில் தான் வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
இன்றிரவு கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தப்படும்? ராஜேஷ் லக்கானி தகவல்
மாண்டஸ் புயல்
இந்த மாண்டஸ் புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இருப்பினும், இன்று காலை மீண்டும் இது சாதாரண புயலாக வலுவிழந்தது. இந்தப் புயல் இன்றிரவு 9.40 மணியளவில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இந்தப் புயல் இப்போது சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 90 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் இப்போது மணிக்கு சுமார் 10-15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
பலத்த காற்று
இன்னும் சில மணி நேரத்தில் புயலின் மையப் பகுதியான கண் பகுதியும் கரையைக் கடக்கும் நிலையில், தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இப்போது பலத்த காற்று வீசி வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு சுமார் சுமார் 70 கிமீ வேகம் வரை காற்று வீசி வருகிறது. புயல் நெருங்க நெருங்கக் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சுமார் 90 கிமீ வரை காற்று வீசக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
சென்னையில் கனமழை
மாண்டஸ் புயல் நெருங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாமல்லபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் நகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை
கிழக்கு கடற்கரை சாலையிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இன்றிரவு 10 மணி முதல் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாகத் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரம்
மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில், பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கடந்த 3 மணி நேரமாகப் பலத்த மழை பெய்து வரும் நிலையில், புயல் முழுமையாகக் கரையைக் கடக்கும் வரை பலத்த மழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
14ஆவது புயல்
மேலும், புயல் நெருங்க நெருங்கக் காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. இது சாதாரண புயலாகவே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு சுமார் அதிகபட்சமாக 75-85 கிமீ வரை காற்று வீசக்கூடும். கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 13 புயல்கள் சென்னைக்கும் புதுவைக்கும் இடையைக் கரையைக் கடந்துள்ளது. இப்போது 14ஆவது புயலாக மாண்டஸ் மாமல்லபுரம் அருகே சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையைக் கடக்க உள்ளது.