நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்திய படி திருமணம் செய்த ஜோடி.. ஆழ்கடல் செடிகளில் மணமேடை!
சென்னை: நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்தியபடி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னத்துரை, பி ஏ பட்டதாரி. இவருக்கும் கோவையை சேர்ந்த பிடெக் பட்டதாரி ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களது தங்களது திருமணத்தை வித்தியாசமாக செய்ய முடிவு செய்திருந்தனர்.
60 அடி ஆழம்
அதன்படி கடலில் நீந்தியபடி திருமணம் செய்ய விரும்பினர். இதற்காக சின்னத்துரை தனது உறவினரான புதுவை மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சி பள்ளியின் உரிமையாளரான அரவிந்தை அணுகினார். அவரது பயிற்சியின்படி நீலாங்கரை அருகே கடலில் 60 அடி ஆழத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பாரம்பரிய உடை
மணமக்கள் இருவரும் பாரம்பரிய திருமண உடை அணிந்து கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் நீலாங்கரை கடற்கரைக்கு வந்தனர். இவர்களுக்காக ஆழ்கடலில் இருக்கும் செடிகளில் பூக்களை கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அம்சங்கள்
இருவரும் படகில் நடுகடலுக்கு வந்தனர். அங்கிருந்து இருவரும் பாதுகாப்பு அம்சங்களுடன் ஆழ்கடலில் அமைக்கப்பட்ட மண மேடைக்கு சென்றனர். இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். பின்னர் சின்னத்துரை ஸ்வேதாவிற்கு தாலி கட்டினார். இதையடுத்து நீந்தியபடியே இருவரும் மேலே வந்தனர்.
மாசு
அவர்களுக்கு அங்கு காத்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறினர். இதுகுறித்து சின்னத்துரை கூறுகையில், நான் ஆழ்கடல் டைவிங் பயிற்சி பெற்றுள்ளேன். தற்போது கடலில் அதிக அளவில் கழிவுகள் கலந்து மாசு அடைந்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இது போன்ற வித்தியாசமான திருமணத்தை செய்தேன் என்றார். இவர்களது திருமண வரவேற்பு வரும் 13-ஆம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெறவுள்ளது.