காசிமேட்டில் அர்த்தராத்திரியில் கொத்து கொத்தாக.. கிட்ட பார்த்தால்? சென்னை கடற்கரையில் என்ன நடக்குது?
சென்னை: காசிமேடு, திருவொற்றியூர், நெம்மேலி குப்பம் உட்பட சென்னை, திருவள்ளூர் கடற்கரை பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்த விழிப்புணர்வுகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும், மீனவர்கள் பெருத்த கவலையில் உள்ளனர். என்ன நடந்தது?
கடந்த மாதம் திருவொற்றியூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியிருந்தன.. அடுத்த நாளே 15 ஆமைகள் கரையில் இறந்துகிடந்தன.. சில ஆமைகள் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

கடந்த வாரமும், நெம்மேலி குப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்தன. அதேபோல, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் 8 ஆமைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. 4 நாளைக்கு முன்பும், உயிரிழந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கொத்து கொத்தாக ஆமைகள் இறந்து வருவது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்: பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் துவங்கி, காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை ஓரங்களில், இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்குவது சமீபநாட்களாகவே தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இறந்த நிலையில் ஆமைகளை பார்த்த மீனவர்கள் பெரும் கவலை அடைந்தனர்... இந்த 1 மாதத்தில். 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதாகவும், அவைகளை பள்ளம் தோண்டி புதைத்ததாகவும், வனத்துறையினர் கூறுகிறார்கள்.
ஆமைகள்: எந்த கடற்கரையில் முட்டை பொரித்து, குஞ்சாக கடலுக்கு சென்றதோ, வளர்ந்தபிறகு அதே இடத்தில் தான் ஆமைகள் முட்டையிடுமாம்.. ஒரே இடத்தில் வாழ்ந்தாலும், முட்டையிட பல்வேறு இடங்களுக்கு செல்லும். 40 முதல் 45 நிமிடங்களுக்கு ஒரு முறை, கடல் மேற்பரப்பில் வந்து சுவாசித்து செல்லக்கூடியவை ஆமைகள்..
அந்தவகையில், காசிமேட்டில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, கடற்கரை பகுதிகளுக்கு வந்து ஆமைகள் முட்டையிடுவது வழக்கமாம்.. இதற்காகவே சென்னை கடற்கரை பகுதியில், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்வதும் உண்டு.. அப்படி கடற்கரையில் அவை விட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அடைகாத்து குஞ்சு பொரித்த பிறகு கடலில் விட்டுவிடுவார்கள்..
காசிமேடு பீச்: அதுபோலதான் தற்போதும் இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால், காசிமேட்டு பீச்சில் 20க்கும் மேற்பட்ட ஆமைகள் ஒரேநாளில் நேற்றுமுன்தினம் இறந்துள்ளதை பார்த்து மறுபடியும் மீனவர்கள் நிலைகுலைந்து போய்விட்டார்கள்..
கடற்கரை பகுதியில் வாக்கிங் செல்பவர்கள், வனத்துறையினர், "ட்ரீ" என்ற அமைப்புடன் சேர்ந்து, இறந்த ஆமைகளை சில தினங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி புதைத்திருக்கிறார்கள்.. அதேபோல, இறந்த ஆமைகளை, வனத்துறையும் அங்கிருந்து அகற்றி வருகிறது.. இதற்காகவே நள்ளிரவு நேரங்களில் ரோந்து பணியும் நடக்கிறது.
உயிரிழப்புகள்: இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்க காரணம் இதுவரை தெரியவில்லை..நெம்மேலிகுப்பம் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதேபோல, கடற்கரை நோக்கி வரும்போது, அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகுகளிலும் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறை அலுவலர்கள் கருதுகிறார்கள்.
மீனவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி இதுபோன்று உயிரிழந்திருக்கலாம் என்பதால், மீனவர்களிடையே விழிப்புணர்வையும் வனத்துறை தரப்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோரிக்கைகள்: அதேபோல, ஆமைகள் இறந்து வருவதுடன், அவைகளில் சில அழுகியும் கிடப்பதால், திருவொற்றியூர் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.. காசிமேடு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் அழுகிய நிலையில் உள்ளதால், அங்கேயும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கடற்கரை பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால், வனத்துறையினர் ஆமைகளை அகற்ற உடனே நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications