கிளாம்பாக்கம் எபெக்ட்! 10 லட்சத்தில் வாங்கிய சென்னை நிலம் இன்று 1 கோடியா? வண்டலூர் கிரவுண்டு விலை?
சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அந்தப் பகுதியின் அடிப்படையையே டோட்டலாக மாற்றி அமைத்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை சென்னையின் புறநகர் பகுதிகளாகவும், அமைதியான குடியிருப்புப் பகுதிகளாகவும் பார்க்கப்பட்ட வண்டலூர், ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் இன்று ரியல் எஸ்டேட் உலகின் தங்கச் சுரங்கமாக மாறியுள்ளன. இதற்கு என்ன காரணம்?
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் வருகை, போக்குவரத்து வசதியை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நிலத்தின் மதிப்பை யாரும் எதிர்பார்க்காத உயரத்திற்குத் தள்ளியுள்ளது.

கிளாம்பாக்கம் நிலம்
ஒரு காலத்தில் வெறும் புதர் காடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் இருந்த இந்தப் பகுதிகளில், நிலத்தின் சதுர அடி விலை சில நூறு ரூபாய்களில் இருந்து சில ஆயிரங்களாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஜி.எஸ்.டி சாலைக்கு மிக அருகாமையில் உள்ள நிலங்களின் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது. முன்பு லட்சங்களில் பேசப்பட்ட நிலத்தின் விலை, இன்று கோடிகளில் பேரம் பேசப்படும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.
கிளாம்பாக்கம் முனையம் வருவதற்கு முன்னால் ஒரு கிரவுண்ட் 30 முதல் 40 லட்ச ரூபாய்க்குள் விற்கப்பட்ட பகுதிகளில், இன்று அடிப்படை விலையே 1 கோடியைத் தாண்டி நிற்கிறது. பிரதான சாலையை ஒட்டியுள்ள வணிக இடங்கள் இன்று சதுர அடிக்கு 8,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை பேரம் பேசப்படுகின்றன.
வண்டலூர் டூ ஊரப்பாக்கம்
குறிப்பாக, 50 முதல் 100 கோடி ரூபாய் முதலீட்டில் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கு வரிசைகட்டி வருகின்றன. ஆனால், இந்த 'கோடி ரூபாய்' கணக்கு என்பது மெயின் ரோட்டில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. உட்புறப் பகுதிகளில் இப்போதும் சதுர அடி 3,000 ரூபாய்க்கு கிடைப்பதும் நிலவும் நிதர்சனமான உண்மையாகும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செயல்படத் தொடங்கிய பிறகு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் முக்கிய மையமாக இது மாறியுள்ளதால், இங்கு வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான தேவை முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
உயரும் நிலத்தின் மதிப்பு
இந்த நில மதிப்பு உயர்வு வெறும் காகித அளவிலான உயர்வு மட்டுமல்ல, களத்தில் மிகப்பெரிய கட்டுமான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் இன்று வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் காளான் போல முளைத்து வருகின்றன. முன்னணி கட்டுமான நிறுவனங்கள் இந்தப் பகுதிகளில் முதலீடு செய்யப் போட்டி போட்டு வருகின்றனவாம்.
நடுத்தர வர்க்கத்தினர் முதல் உயர் வருவாய் ஈட்டுபவர்கள் வரை அனைவரும் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியக் காரணம், இங்கிருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கும், வெளிமாவட்டங்களுக்குப் பயணிப்பதற்கும் உள்ள எளிமையான போக்குவரத்து வசதியே ஆகும்.
10 கோடி ரூபாய் மதிப்பு
மேலும், வண்டலூர் உயிரியல் பூங்கா, அருகிலுள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் தற்போது வந்துள்ள பிரம்மாண்ட பேருந்து முனையம் என அனைத்தும் இணைந்து இந்தப் பகுதியை ஒரு 'மினி சிட்டி'யாக மாற்றியுள்ளன. இதனால் நிலத்தின் உரிமையாளர்கள் பெரும் லாபத்தைக் கண்டுள்ளனர். சாதாரண பிளாட்களாக விற்கப்பட்ட இடங்கள் இப்போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாகும், சொகுசு அப்பார்ட்மென்ட்களாகவும் உருவெடுத்துள்ளன.
இந்தப் பகுதிகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் இப்போதும் நிலங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த விலை ஏற்றம், இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பகுதியை சென்னையின் மிக முக்கியமான மற்றும் அதிக மதிப்புள்ள வணிக மையமாக மாற்றும் என்கிறார்கள்.. எளிய மக்களின் பார்வையில் இது ஒரு பேருந்து நிலையமாகத் தெரிந்தாலும், முதலீட்டாளர்களின் பார்வையில் இது ஒரு வளமான எதிர்காலமாகத் தெரிகிறது.
ஜிஎஸ்டி சாலை
அதேசமயம் இந்த நில விலை உயர்வு என்பது அனைத்து இடங்களுக்கும் பொதுவானது அல்ல என்பதை முதலீட்டாளர்கள் உணர வேண்டும். குறிப்பாக, ஜி.எஸ்.டி சாலையை ஒட்டியுள்ள இடங்களுக்கும், முறையான CMDA அங்கீகாரம் பெற்ற மனைகளுக்கும் மட்டுமே இந்த உச்சகட்ட விலை உயர்வு பொருந்தும். உட்புறப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறாத இடங்களின் மதிப்பு இப்போதும் நிதானமாகவே உயர்ந்து வருகிறது.
அதேபோல், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலையையும், ஒரு தனி நிலத்தின் மதிப்பையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது. முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் சீரான குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்தப் பகுதி ஒரு முழுமையான நகரமாக மாற இன்னும் சில காலமாகும்.. அதனால் ஒரு இடத்தின் அங்கீகாரம் மற்றும் அமைவிடத்தைப் பொறுத்தே முதலீடுகள் அமைய வேண்டும் என்பது சந்தை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது...!












Click it and Unblock the Notifications