சென்னை கீழ்ப்பாக்கம் ஹோட்டலில் ரூம் எடுத்து போதை பார்ட்டி.. பெண்கள் உள்பட கொத்தாக சிக்கிய 18 பேர்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் அறை எடுத்து தங்கி போதை பார்ட்டி நடத்திய 3 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் இசையமைப்பாளரின் மகள் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் 18 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் பிரபல பப்பில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓட்டல் அறைகளில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை.

அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதன்பின்னர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் தான் அந்த பார்ட்டியில் பங்கேற்றதும், மெத்தபெட்டமைன் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களது 3 கார்கள், 2 பைக்குகள், 18 செல்போன்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இதே பகுதியில் உள்ள பப்பில் நேற்று முன் தினம் பார்ட்டி நடந்ததாகவும், அந்த பார்டியில் தான் இவர்கள் போதைப்பொருள், கஞ்சா பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதற்கு பிறகு தான் அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் அவர்களிடம் தனித்தனியாக விசாரித்ததில், கைது செய்யப்பட்டதில் ஒரு பெண் சினிமா இசையமைப்பாளரின் மகள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் யார் என்று தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றம் அவர்கள் 18 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications