பெண் ஐபிஎஸ் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த உதவி ஆணையர்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நந்தம்பாக்கம் பகுதியில் இன்று வாகனங்களை ஒழுங்குபடுத்துமாறு கூறிய காவல் இணை ஆணையர் திஷா மிட்டலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை தனி விமானத்தில் சென்னைக்கு வருகை தந்த ஜனாதிபதி முர்மு, நாளை திருச்சி செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தபோது நந்தம்பாக்கம் வர்த்தக மையம் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த இணை ஆணையர் திஷா மிட்டல் கூறியுள்ளார். அப்போது திஷா மிட்டலிடம் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயரதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததற்காக காவல்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications