வான வெடிகளால் புகைமூட்டமாக மாறிய சென்னை! காற்று மாசு அதிகரிப்பு! உற்சாகம் குறையாத கொண்டாட்டம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்ததாலும், வான வெடிகளால் வர்ண ஜாலங்கள் காட்டியதாலும் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
சென்னையை பொறுத்தவரை காற்றின் தரக்குறியீடு 178 ஆக உயர்ந்துள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது இன்னும் இனி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசுகளை வெடித்து பரவசம் அடைந்து வருகின்றனர்.
தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் பல இடங்களில் அந்தக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுவதாக தெரியவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் கிராமப்புறங்களில் இந்த நேரக்கட்டுப்பாடுகள் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவது போல் தெரியவில்லை. இதனிடையே தமிழக அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டாசுகளை தொடர்ந்து வெடித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னை ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 என காற்று மாசு பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக இருக்கும் நிலையில் அதன் அளவு இன்னும் இனி அதிகரிக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இதனிடையே காற்று மாசு அதிகரிப்பால் சாலைகள் புகை மண்டலமாக பனி படர்ந்தது போல் பல இடங்களில் காட்சியளிக்கின்றன.












Click it and Unblock the Notifications