முதியவரை நிர்வாணமாக்கி கடித்த ராட்வீலர் நாய்.. காற்றில் பறக்கும் சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை: இந்தியாவில் நாய் கடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. தெரு நாய்களின் தொல்லை ஒரு பக்கம் என்றால், வளர்ப்பு நாய்களாலும் பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னையில் வயதான தம்பதியை ஒருவர் தன் ராட்வீலர் நாயை வைத்து கடிக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நாய் கடியால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் 3.19 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 19 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இதுவே கடந்த 2024 ஆம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 43 பேர் ரேபிஸால் உயிரிழந்தனர்.

2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 3 பேர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழந்தனர். தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
மறுபக்கம் வளர்ப்பு நாய்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகளவு உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்தாண்டு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை 2 ராட்வீலர் வகை நாய்கள் கடித்தன. இதேபோல மாங்காடு பகுதியில் ஒரு சிறுவனை ராட்வீலர் வகை நாய் கடித்து குதறியது. இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து ராட்வீலர் உள்ளிட்ட 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால் அந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. சென்னை மாநகராட்சி நிர்வாகமும் வளர்ப்பு நாய்களை வளர்க்க பல்வேறு விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி நாய் வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.
நாய்களை வாக்கிங் அழைத்து வரும்போது அதன் வாய் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் மாநகராட்சியின் விதிகளை பெரும்பாலான நாய் உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியில் கவியரசன் என்ற வழக்கறிஞர் ராட்வீலர் வகை நாயை வளர்த்து வருகிறார்.
அதுதொடர்ந்து அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்துள்ளது. கவியரசன் அந்த நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது வாய் பகுதியை கட்டாமல் சென்றதாகவும் புகார் உள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் மாரியப்பன் என்பவர் கவியரசனிடம் நாயை பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
முதியவரிடம் மரியாதை குறைவாக பேசிய கவியரசன், தான் வழக்கறிஞர். எனக்கு காவல்துறை உயர் அதிகாரிகளை தெரியும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே தன் ராட்வீலர் நாயை வைத்து அவரை கடிக்க வைத்துள்ளார். அந்த நாய் மாரியப்பனின் வேட்டியை இழுத்து உருவி அவரை நிர்வாணமாக துரத்தி கடித்துள்ளது.
வயதான தம்பதி இருவர் மீதும் ஏறி கடித்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தட்டி கேட்டுள்ளார். கவியரசன் அவரையும் தன் நாயை வைத்து கடிக்க வைத்துள்ளார். மக்கள் ஒன்றுகூடி தட்டி கேட்டபோதும் கவியரசன் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரமேஷ் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராட்வீலர் நாய்க்கு தடை விதிப்பதுடன் கவியரசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து ராட்வீலர் போன்ற நாய்கள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாய் பிரியர்கள் பெரும்பாலானோர் சென்னை மாநகராட்சி விதித்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications