சென்னை மெரினாவில் திடீர் பதற்றம்.. குவிந்த அதிகாரிகள்.. உச்சகட்ட கொந்தளிப்பில் மீனவர்கள்!
சென்னை: சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையின் நடைமேடையில் ஆக்கிரிமத்து மீனவர்கள் கடை வைத்திருந்தனர். இதை நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மெரினா கடற்கரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்தும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

அந்த மனுவில், மீன் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை கோரியது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, லூப் சாலையின் கிழக்கு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சாலை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னைமாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன், சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை, லூப் சாலையில் ஆக்கிரிமிப்புகளை அகற்ற முயன்றனர். இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து மீனவர்கள் கூறும் போது, இந்த நொச்சிகுப்பம் பகுதி காலம் காலமாக மீனவர்களால் மீன்பிடிக்கப்பட்டு விற்பனை செய்யும் பகுதியாகும். நாங்கள் 50 வருடங்களாக மீன்களை பிடித்து இங்கு விற்பனை செய்து வருகிறோம். கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை ஏழு மீனவ கிராமங்கள் இருக்கிறது. இங்கு எல்லோருடைய தொழிலுமே மீன் பிடிக்கும் தொழில் தான். ஆக்கிரிமிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த லூப் சாலையை 2015 இல் தான் போட்டார்கள். இந்த சாலையை போடும் போது, மீனவர்களின் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்த சாலை பாதிக்காது. இரண்டு மணி நேரம் போக்குவரத்துக்கு அனுமதித்தால் போதும் என்று பல வாக்குறுதிகளை அளித்துதான் இந்த சாலையை போட்டார்கள்.
இந்த சாலையை நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. இந்த இடம் மீன் பிடிக்கும் இடம். நாங்கள் செய்வது மீன்பிடி தொழில். எங்கள் வீட்டு வாசலில் நாங்கள் மீன் விற்கிறோம். நாங்கள் எந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம் என்று சொல்கிறீர்கள். நொச்சிகுப்பம் முதல் ஸ்ரீனிவாசபுரம் வரை மீன்பிடிப்பு பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தயவு செய்து இங்குள்ள மீன் கடைகளை இன்னொரு இடத்தில் கட்டித்தருகிறோம் போங்க என்று சொல்வதோ, இங்குள்ள படகுகளை நகற்றுவதோ எந்த வகையிலும் நியாயம் இல்லை.
இது எங்கள் வாழ்வாதாரத்திற்கான இடம் . நொச்சிகுப்பம். மீன்பிடி மக்கள் மட்டுமல்ல.. சென்னையில் புயல் வெள்ளத்தின் போது 100க்கணக்கான மக்களை காப்பாற்றக்கூடியதாக நொச்சிகுப்பம் தொடர்ந்து இருக்கிறது. நொச்சிகுப்பம் மீனவர்களின் கிராமம். இங்கு எங்கள் வீட்டு வாசலில் மீன் விற்கிறோம். உங்களுக்கு என்ன பிரச்சனை. டிஜிபி ஆபிஸ் முதல் பட்டினம்பாக்கம் வரை சாலையை விரிவாக்கம் செய்வதாக 25 வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் விரிவாக்கம் செய்யாதது ஏன் என்று மீனவர்கள் கேள்வி எழுப்பினார்கள்,












Click it and Unblock the Notifications