சென்னை மேடவாக்கத்தில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு!
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் ஒரு தலைக்காதலால் சிறுமியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ஆம் வகுப்பு முடித்த நிலையில் தற்போது அவர் வண்டலூரில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

அவரை அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் ஒரு தலையாக காதலித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது காதலை பல முறை அந்த சிறுமியிடம் சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வசந்த், கடைசியாக அந்த பெண் கல்லூரிக்குச் செல்ல மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்த அந்த பெண்ணிடம் மீண்டும் தனது காதலை ஏற்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண் இவரிடம் பேச மறுத்து தவிர்த்துள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த வசந்த், மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். அந்த பெண்ணை கத்தியால் குத்திய போது மாணவி தடுத்ததால் கை விரலில் காயம் ஏற்பட்டது. அது போல் தலை, முகம், தொடை உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் கத்திக்குத்து ஆழமாக உள்ளது.
இதையடுத்து சிறுமியின் அலறல் சப்தம் கேட்டவுடன் அங்கு பொதுமக்கள் திரண்டனர். உடனே மின்னல் வேகத்தில் வசந்த் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வசந்தை தேடி வருகிறார்கள். ஒரு தலை காதல், பிரேக் அப் உள்ளிட்ட சம்பவங்களால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை கத்தியால் குத்துவது, ஆசிட் ஊற்றுவது, ரயில் வரும் போது பிடித்துத் தள்ளுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications