மே மாதத்தில் தொடர்ந்து பெய்யும் மழை..வரும் நாட்களில் இங்கெல்லாம் மழை இருக்காம்.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த கத்தரி வெயில் வரும் மே 28ஆம் தேதி வரை இருக்கும்.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
பொதுவாக கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு மழை மே மாதம் சில நாட்களைத் தவிர தொடர்ந்து மழை பெய்தே வருகிறது.
மிதமான மழை
இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 20,21) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்கள்
அதேபோல மே 22, மே 23 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மே 24 உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்களுக்கான எச்சரிக்கை மே 20, 21 தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செல்ல வேண்டாம்
வடக்கு கேரளா - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.