இந்த 2 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்
சென்னை: தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று முதல் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மேற்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாளை வட உள் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். அடுத்து வரும் செப். 7 முதல் 9ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மிதமாக மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை. பேராவூரணியில் அதேபட்சமாக 5 செமி மழைப் பதிவாகியுள்ளது.
மேலும், மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அரேபிக் கடலில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரேபிக் கடல் பகுதிகளில் காற்று 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அங்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications