குஷி..! வரும் நாட்களில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. 'சில்'லாகும் தமிழ்நாடு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருவள்ளூர், வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த சில மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பருவமழை சரியாக பெய்யாமல் இருந்து வந்தது. இதனால் கோடைக் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
ஆனால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள பெரும்பாலான ஏரி மற்றும் குளம் நிரம்பியுள்ளன. இதனால் அடுத்த ஆண்டு மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு குறைவே என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் கனமழை
இந்தச் சூழலில் அடுத்து வரும் சில நாட்களுக்குத் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை
அதேபோல நாளை ( செப். 24 ) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி கனமழையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை ( செப். 25 ) மறுநாள் கடலோர மாவட்டங்களில் கனமழையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் செப் 26ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தலைநகர் சென்னை
தலைநகர் சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மேலூரில் 70 மிமி திருபுவனம் புலிப்பட்டி ஆகிய பகுதிகளில் 60 மிமி மழையும் பெய்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
மேலும் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வரும் நாட்களில் ஆந்திர கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications