சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்!
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாகவும் ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பு எச்சரித்திருந்தது.
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி நேற்று அறிவுறுத்தியிருந்தது.
மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகாட்சி அறிவித்திருந்தது.
இருப்பினும், இன்றைய தினம் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்குக் கனமழை இல்லை. மாறாக விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடக்கு உள் மாவட்டங்களிலேயே கனமழை பெய்தது.
இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக நாளை சென்னை, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீமான் vs வன்னி அரசு- தலித்துகளை இழிவுபடுத்துன அந்த 2 சினிமா காட்சிகள்- தவிர்க்க சொல்லலையே ஏன்?