இந்த 2 மாவட்டத்தில் உறை பனி.. பொங்கல் லீவுக்கு பின் கிளைமேட் எப்படி இருக்கும்! வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அனைவரும் சொத்து ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனிடையே அவர்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பும் போது வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக். மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் பெரியளவில் மழை இல்லை என்றாலும் அதன் பிறகு மழை சிறப்பாகவே இருந்தது. இந்த வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இந்த வடகிழக்கு பருவமழையில் நல்ல அளவுக்கு மழை இருந்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பியே காணப்படுகிறது.

வானிலை
இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இன்றும் (ஜன. 15), நாளையும் (ஜன. 16) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

உறை பனி
இந்த இரு நாட்கள் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கும் வாய்ப்புள்ளது. வரும் ஜன.17 முதல் ஜன.19 வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் கணிசமாக மழை பெய்யவில்லை என்றும் அந்த வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களாகவே ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உறை பனி தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. உதகை, அவலாஞ்சி சுற்றுவட்டார உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் இந்த உறைபனி காரணமாக 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் கருகி வருகிறது. இதனால் தேயிலை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications