வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த 17 மாவட்டங்களில் சூப்பர் மழை.. வானிலை மையம்
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு பருவமழை காரணமாக இந்தியா முழுவதுமே போதுமான அளவு மழை பெய்து வருகிறது. டெல்லி, இமாசல பிரதேசம் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 மாவட்டங்கள்
இந்நிலையில்,தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் சேலம், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எந்த மாவட்டங்கள்
நாளை மற்றும் நாளை மறுதினம் (செப். 13 & செப். 14)13 நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் சில உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதேபோல 15ஆம் தேதி நீலகிரி ,கோவை, தேனி, திண்டுக்கல் ,சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் வட உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

Array
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப். 15 மற்றும் செப். 16ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 90 மிமி மழையும் நீலகிரி பந்தலூரில் 60மிமி மழையும் பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மேலும் நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக வடமேற்கு வங்கக் கடல், வட ஆந்திர கடல் தென் கிழக்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் 40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியிலும் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் எச்சரிக்கையுடன் அப்பகுதிக்குச் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications