கேரளாவுக்கே போயிறலாமோ.. குண்டை தூக்கிப்போட்ட வானிலை மையம்! தமிழ்நாட்டில் இன்னும் வெப்ப அலை வீசுமாம்
சென்னை: தென் மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி இருப்பதால் அரபிக் கடலை ஒட்டி கேரளாவில் மழை தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பைப்பர்ஜாய் நேற்று காலை 11:30 மணி அளவில் மிக தீவிர புயலாக வலுப்பெற்றது.

வடக்கு திசையில் நகர்ந்து இன்று (08.06.2023) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 - 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்." என்று தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் மே மாதம் வழமையாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட ஜூன் மாதம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் கேரளாவில் இனி வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் எப்போது வெயில் குறைந்து மிதமான வெப்ப நிலை ஏற்படும் என்று மக்கள் ஏக்கமடைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications