சென்னை மெட்ரோ சரியான நேரத்தில் எடுத்த அந்த “முடிவு”.. நேற்று வரலாற்று சாதனை.. 4 லட்சம் பேர் பயணம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் அதிகம் பேர் பயணித்துள்ளனர். விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது கடுமையான நெரிசல் ஏற்பட்ட நிலையில், மெட்ரோ ரயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டதன் மூலம் பெருமளவில் நெரிசல் குறைந்தது.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி அசர வைத்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையை சென்னை விமான சாகச நிகழ்வு படைத்தது.

கடுமையான கூட்ட நெரிசல்: பகல் 1 மணியுடன் விமான வான் சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதையடுத்து ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி செல்ல முயன்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்க உள்ளே செல்லவே முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
இதையடுத்து, கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கையை கையில் எடுத்தது. மெரினாவில் விமானப்படை சாகசத்தை பார்த்துவிட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
3.5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்: அதன்படி, தற்போது சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ - ஏ.ஜி. டி.எம்.எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. விம்கோ நகர் - விமான நிலையம் இடையேயும், கோயம்பேடு மெட்ரோவில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இடையேயும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பபட்டன.
எனினும், பயணிகள் கூட்டமாக வந்ததால் டிக்கெட் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. நெட்வொர்க் ஜாம் ஆகி, டிக்கெட் ஸ்கேனிங் எந்திரம் உடனுக்குடன் செயல்படவில்லை. இதையடுத்து, நெரிசலால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடாமல் தவிர்ப்பதற்காக, கூட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்: உடனடியாக, டிக்கெட்டை ஸ்கேன் செய்தால் கதவு திறக்கும் தானியங்கி தடுப்பு கேட் அகற்றப்பட்டு, அனைவரையும் அனுமதித்தனர். டிக்கெட் எடுக்க யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் டிக்கெட் எடுக்காமல் சென்றனர்.
நேற்று மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை மெட்ரோவில் 1.70 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். ஆனால், நேற்று மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வையொட்டி மிக அதிக அளவிலான மக்கள் பயணித்தனர்.
இதற்கு முன்பு: இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, ஒரே நாளில் 3,74,087 பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர். அதுவே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள், ரயில்களை பிடிக்க மெட்ரோ ரயிலை அதிகளவில் பயன்படுத்தி இருந்தனர். இந்நிலையில், அந்த சாதனையை நேற்று தகர்த்துள்ளது சென்னை மெட்ரோ.












Click it and Unblock the Notifications