‛சல்லி சல்லியாக உடைந்த கண்ணாடி’.. 4 பேர் காயமடைந்தது எப்படி? சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று திடீரென்று கண்ணாடி உடைந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் காயமடைந்தவர்கள் எப்படி உள்ளனர்? மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்தபோது என்ன நடந்தது? என்பது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய விளக்கம் அளித்துள்ளதோடு, வருத்தமும் தெரிவித்துள்ளது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரிய பெரிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இதுபோன்ற பெரிய நகரங்களுக்கு குறிப்பிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வெளிமாநிலத்தவர்களுக்கும் அதிகம் உள்ளனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகனங்களில் விரைவாக பயணிக்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் தான் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணிக்க சென்னையில் டெம்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. அதன்படி சென்னை விம்கோ நகர் - விமான நிலையம், விம்கோ நகர் - கோயம்பேடு வழியாக பரங்கிமலை மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் தினமும் ஏராளமானவர்கள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மெட்ரோ ரயிலின் கண்ணாடி சல்லிசல்லியாக உடைந்து சிதறியது. திடீரென்று மெட்ரோ ரயிலில் பிரேக் போடப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இந்த கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. இந்த கண்ணாடி உடைந்து சிதறியதில் மெட்ரோ ரயலிலில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சம்பவம் குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த மெட்ரோ ரயிலின் லக்கேஜ் ரேக்கின் டஃப் செய்யப்பட்ட கண்ணாடி உடைந்த சம்பவம் பற்றி தெளிவுப்படுத்த விரும்புகிறோம். லக்கேஜ் ரேக் கடினமான கண்ணாடியால் ஆனது. இது உடைந்தால் சிறிய மற்றும் மழுங்கிய துண்டுகளாக மாறும். பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும் நேற்று இந்த கண்ணாடி உடைந்து 4 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களின் உடலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையிலும் சிகிச்சை வழங்கப்பட்டது. வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று அவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி விரிவாக விசாரித்தும், ஆலோசனை மேற்கொண்டும் வருகிறோம்.
நேற்றைய சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை மற்றும் அனைத்து செயல்பாடுளிலும் உயர்தர பாதுகாக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறோம் என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம். அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications